புதுதில்லி:
ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னியல் அமைச்சகம் அதிர்ச்சிகரமாக பதிலளித்துள்ளது.
கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, ‘ஆரோக்கியசேது’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, அருகில் வரும் நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அது நமக்கு எச்சரிக்கை தரும் என்று கூறப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப் பட்டது என்பது குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசியதகவல் மையத்தை கேட்டுக்கொண்டது.
இதற்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியாது என தெரிவித்தது.இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடிஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம். மேலும் ஆரோக்கிய சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவ்விவகாரம் குறித்து, அடுத்த மாதம் சிபிஓக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.